அத்தியாவசியமற்ற நோக்கங்களுக்காக கனடாவுக்கு வர முயல்பவர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் ஜனவரி 21 வரை நீடிக்கப்படும் என கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொழுதுபோக்கு, சுற்றுலா அல்லது அதுபோன்ற அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக கனடா வரும் எந்தவொரு பயணிகளும் எல்லைகளில் வைத்துத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை டிசம்பா் 21 வரை கனடா நீடித்துள்ளது. நிலைமையைப் பொறுத்து அது நீடிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி விளையாட்டு நிகழ்வுகளுக்காக சர்வதேச வீரர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராய ஒரு கட்டமைப்பை கனடா உருவாக்குகிறது.
விளையாட்டுக்கான இந்த அனுமதியை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக போட்டிகள் நடத்தப்படவுள்ள மாகாண அரசின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டமைக்கான எழுத்துபூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஏற்கனவே சில தரப்புக்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை கனடா நீக்கியுள்ளது.
இவா்களில் கனடிய குடிமக்கள் ( இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் உட்பட), நிரந்திர வதிவிட உரிமை பெற்றவர்கள் கனடா வர இதுவரை இருந்துவந்த கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அத்துடன், சில தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள்; சர்வதேச மாணவர்கள், கனடியர்களின் நேரடி குடும்ப உறுப்பினர்கள், கருணை உதவி அடிப்படையில் கனடா வருவோர் உள்ளிட்ட தரப்பினருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.